எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஜாக்டோ-ஜியோ போராட்டம் ஒத்திவைப்பு

Wednesday, May 9, 2018


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் வாலாஜா சாலையில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கொண்ட போராட்டத்தை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.
அடுத்தகட்ட போராட்டம் குறித்து திருச்சியில் வரும் 20-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், 7-ஆவது ஊதியக் குழுவின் முரண்பாடுகளைக் களைய வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை சீரமைக்க வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள், அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ - ஜியோ தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக சென்னையில் செவ்வாய்க்கிழமை கோட்டையை முற்றுகையிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் பட்டியலை தயாரித்து ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் காவல் துறையினர் கைது நடவடிக்கையை தொடங்கினர். இதன்படி, தமிழகம் முழுவதிலும் 250-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டமும் கைது நடவடிக்கைகளும்...: சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், தலைமைச் செயலகம் செல்லக் கூடிய சாலைகளான அண்ணாசாலை, சேப்பாக்கம், கடற்கரை சாலைகளில் நூற்றுக்கணக்கான போலீஸார் கூடுதலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
ஆனால், சென்னை சேப்பாக்கம் வாலாஜா சாலையில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட முயன்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அவர்களை கைது செய்து வேனில் ஏற்ற முயன்றனர். அப்போது, பெண் ஊழியர்கள் உள்பட பலரும் வேனில் ஏற மறுத்தனர். அவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்த போலீஸார், வேனில் ஏற்றினர். இந்தப் போராட்டத்தால், வாஜாலா சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. சுமார் 2 மணி நேரத்துக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. பேருந்துகளும், இதர வாகனங்களும் வேறு திசையில் திருப்பி விடப்பட்டன.
சென்னை சேப்பாக்கம் வாலாஜா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் தங்கவைத்தனர். அதேபோல், காமராஜர் சாலையில், எழிலகம்-சென்னை பல்கலைக்கழகம் அருகே ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு இடங்களில் இருந்து ரயில்களில் வந்தவர்களையும் கைது செய்து சமூக நலக்கூடம், மதரசா பள்ளி, மாநிலக் கல்லூரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிந்தாதிரிப்பேட்டை சமூக நலக்கூடங்களில் தங்கவைத்தனர். இதேபோன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வந்திறங்கிய ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பலரை காவல்துறையினர் கைது செய்து அருகில் இருந்த சமூக நலக்கூடங்களில் தங்கவைத்தனர்.
மேலும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்திருந்த போராட்டம் காரணமாக தலைமைச்செயலகம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் தலைமைச் செயலகத்துக்கு செல்லும் சாலைகளில் தடுப்புகளை வைத்து போலீஸார் தீவிர கண்காணிப்பு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை கைது செய்யும் நடவடிக்கை பிற்பகல் வரை நீடித்தது. இப்போராட்டத்தில் சென்னையில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
போராட்டம் ஒத்திவைப்பு: இதனிடையே சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் தங்க வைக்கப்பட்டிருந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இரவு 10 மணியளவில் இந்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பது என முடிவு செய்துள்ளதாக அறிவித்தனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One