எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

செம சம்மர் வகுப்புகள்!

Friday, May 18, 2018


கோடை விடுமுறையில் பிள்ளைகளை சம்மர் க்ளாஸ்களுக்கு அனுப்பும் முடிவிலிருக்கும் பெற்றோர், ‘ஆனா, நீச்சல், ஓவியம், யோகானு வழக்கமான வகுப்புகளா இல்லாம வித்தியாசமான வகுப்புகளா இருந்தா நல்லாயிருக்குமே’ என்று யோசிக்கிறார்கள். ‘ஸ்கூலுக்குப் போற மாதிரியே சம்மர் க்ளாஸும் இல்லாம, நாங்க என்ஜாய் பண்ணுற மாதிரி ஏதாச்சும் சுவாரஸ்யமா இருக்கணும்’ என்று கேட்கிறார்கள் குழந்தைகள். அப்படி சில ‘மாத்தி யோசி’ சம்மர் வகுப்புகள் பற்றிச் சொல்கிறார்கள், துறை சார்ந்தவர்கள்.

மேஜிக், மூளைக் குத்துப்பாட்டு, என் பர்த்டே, என் டெக்கரேஷன் என மூன்றுவித கான்செப்ட்கள் சொல்லும் பெங்களூருவைச் சேர்ந்த தன்னம்பிக்கை பயிற்றுநர் மற்றும் ஆசிரியரான திவ்யா, “இவை குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும்’’ என்கிறார்.

மேஜிக் செய்யும் மேஜிக்!

“டிவியிலும், மேடை நிகழ்ச்சிகளிலும் மட்டுமே இதுவரை தாங்கள் பார்த்துவந்த மேஜிக்கை நேரடியாகக் கற்றுக்கொள்ளப்போகும் ஆர்வமே, பிள்ளைகளைத் துள்ளவைக்கும். கர்ச்சீப்பின் ஒரு முனையில் மோதிரத்தை வைத்து, அதை மறையச்செய்து, மீண்டும் வரவழைக்கும்போது அந்த மேஜிக் தொடங்கிய நொடி முதல் முடிக்கும்வரை பிள்ளைகளின் கவனம் வேறு எங்கும் சிதறாது. இதன்மூலம் கூர்ந்து கவனிக்கும் திறனையும் செயல்படும் திறனையும் மேஜிக் பயிற்சி வளர்க்கும். ஒரு வாரம் முதல் ஒரு வருடப் பயிற்சிவரை இருக்கின்றன.

மூளைக் குத்துப்பாட்டு!

குத்துப்பாட்டு என்றால் கால்கள் தானாக நடனமாடும். கால்களையும் மூளையையும் மெல்லிய இழையால் இணைக்கும் விளையாட்டுதான், ‘மூளைக் குத்துப்பாட்டு’. உதாரணமாக, பிம் - பம் - பெரி என்று ராகத்துடன் பாடும் பாட்டில், பிம் என்பது கைகளைத் தட்டுவது, பம் என்பது சொடுக்குப் போடுவது, பெரி என்றால் தொடைகளைத் தட்டிக்கொள்வது. பிம் - பம் - பெரியை வேகவேகமாக மற்றும் மெதுமெதுவாகப் பாடும்போது பிள்ளைகளின் கவன ஓர்மையும் கொண்டாட்டமும் இணைந்து நடைபெறும். இது 3 வயது முதல் 15 வயதுவரையிலான குழந்தைகளுக்கானது. 

என் பர்த் டே; என் டெக்கரேஷன்!

ஒரு குழந்தை தன் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குத் தேவையான கேக், மெழுகுவத்தி, காகிதப் பூ, போன்ஸாய் பிளான்ட், கிஃப்ட் பேக்கிங் போன்ற பொருள்களைத் தானே தயாரிக்கப் பழக்கும் பயிற்சி வகுப்பு இது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொருள் தயாரிக்கக் கற்றுக்கொடுக்கப்படும். பயிற்சியின் இறுதிநாள், கலந்துகொண்ட மாணவர்கள் அனைவருக்குமான ஒரு  ‘பர்த் டே பார்ட்டி’யுடன் முடியும். “குழந்தை தன் பிறந்தநாளின்போது, ‘இதையெல்லாம் நானே செய்தேன்’ என்று விருந்தினர்களிடம் காண்பித்து மகிழும்போது, அது அதன் தன்னம்பிக்கையை வளர்க்கும்’’ என்கிறார் திவ்யா.

முகாம், நாடகப் பயிற்சி என குழந்தைகளுக்கு புதுவிதக் கொண்டாட்டங்களைக் கைகாட்டுகிறார் கல்வியாளர் ஆயிஷா நடராஜன்.

நண்பர்கள் பரிசாகக் கிடைப்பார்கள்!

“கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள ஆசிரியர்கள், ஐ.டி பணியாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழு, மலைப் பகுதிக்குப் பிள்ளைகளை அழைத்துச் செல்கிறார்கள். தங்குவதற்குக் கூடாரம் அமைப்பதே முதல் பயிற்சி. அடுத்து, ஒருவருக்குத் தெரிந்ததை மற்றவருக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். ‘எனக்கு எதுவுமே தெரியாதே’ என்று வரும் பிள்ளைகளிடமும் இருக்கும் அபாரமான திறன்களைக் கண்டறிவதுதான் இதன் முதன்மையான நோக்கம். முகாம் முடிந்த பின்னர், ஒரு குழந்தை தன் வீட்டுக்கு, பயிற்சியில் அறிமுகமான இரு குழந்தைகளை அழைத்துச்சென்று, இரண்டு நாள்கள் தங்கவைக்க வேண்டும். ஒரு புதிய இடத்தில் தங்கும்போது கிடைக்கும் அன்பையும் அனுபவங்களையும் அவர்களுக்குக் கிடைக்கச் செய்யவே இந்தத் திட்டம். கூடவே வாழ்நாள் முழுக்கக் கூட வரும் ஒரு தோழியையோ, நண்பனையோ பரிசாகப் பெறுவார்கள்.

நிகழ்த்துக்கலை மகிழ்வு!

புதுச்சேரியில் நடத்தப்படும் நிகழ்த்துக்கலை முகாமில், குழந்தைகளுக்குத் தனி நடிப்பு, பாட்டு, நாடகம், குறும்பட உருவாக்கம் உள்ளிட்ட பல பயிற்சிவகுப்புகள் அளிக்கப்படுகின்றன. இவை அவர்களின் ரசனையை மெருகேற்றும், கற்பனைத் திறனை வளர்க்கும், படைப்புத் திறனைத் தட்டியெழுப்பும், கூச்சம் தவிர்த்து, தெளிவாகத் தன்னை அடையாளப்படுத்திகொள்ள உதவும்.

ஆங்கிலம் அறியலாம்!

மணப்பாறையிலுள்ள ‘Nite’ எனும் குழு, மாணவர்கள் ஆங்கிலத்தைக் கசடறக் கற்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. கோடை வகுப்பில் குழந்தைகளை ஆங்கில நாடகங்களில் நடிக்கச் செய்வது, கதைகளை மொழிபெயர்க்கச் செய்வது எனப் பல செயற்பாடுகளில் ஈடுபடவைக்கிறது. பயிற்சியின் சிறப்பம்சம், மதியம் வரைக்கும்தான் வகுப்பு. பின்னர் மாலைவரை பிள்ளைகள் என்ன விரும்புகிறார்களோ அதை விளையாடலாம். சாதாரண விஷயம் என்பதுபோலத் தோன்றலாம். ஆனால், பிள்ளைகள் தாங்கள் விரும்பும் விளையாட்டை ஆடும்போதே முழுத் திறனையும் பயன்படுத்துகிறார்கள். உடலும் மனமும் ஒருங்கிணைந்து செயல்படும் நேரமது.

கோடை வகுப்புகளுக்குச் செல்லமுடியாத சூழலில் வீட்டிலிருக்கும் குழந்தைகளுக்கு, ரூபிக்ஸ் க்யூபைப் பரிசாக வாங்கிக் கொடுக்கலாம். இது பொழுதுபோக்க ஆடும் விளையாட்டல்ல; வலது, இடது என இருபக்க மூளையையும் இயங்கவைக்கும் மகத்தான பயிற்சி. நினைவாற்றல் சிதையாத கவனத்தைத் தரும். அதேபோல, தாயம், பல்லாங்குழி என நம் பாரம்பர்ய விளையாட்டுகளும் கணக்கைப் பழக்கும், கவனத்தைக் கூராக்கும்.’’

ஹேப்பி ஹாலிடேஸ்!

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One